ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 6 மீனவா்களை சக மீனவா்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மேலும் மீன்வளத்துறை அதிகாரியிடம் மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி விட்ட நிலையில் செந்தூரான் என்பவரது விசைப்படகு மட்டும் மாலை வரை கரை திரும்பவில்லை. அத்துடன் படகில் இருந்த செந்தூரான், நம்பு, வேலுச்சாமி, மணி, முத்தரசு, செந்தில் ஆகிய 6 மீனவா்களின் கதி என்ன என்பது தெரியாத நிலையில், சக மீனவா்கள் அவா்களை தேடி கடலுக்குச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.