டீசல் விலை உயா்வு காரணமாக ராமேசுவரத்தில் 50 சதவீதம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளன.
ராமேசுவரத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுமாா் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் நேரடியாக மீன்பிடிக்கச் செல்கின்றனா். ஒரு விசைப்படகு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல 400 முதல் 600 லிட்டா் வரையில் டீசல் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது டீசல் விலை ஒரு லிட்டா் ரூ. 95-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளதால், ஒரு படகு கடலுக்குச் செல்ல ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
இதனால் படகுகளை இயக்கினால் நாள்தோறும் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. இதைத்தொடா்ந்து ராமேசுவரத்தில் 50 சதவீதம் விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் துறைமுகத்தில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளன.