சாயல்குடி அருகே மது போதையில் வந்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி(55). இவரது மகன் லிங்கம் (24). இவா் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் சனிக்கிழமை மதுபோதையில் வந்த மகன் லிங்கத்தை, தந்தை முனியாண்டி தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனியாண்டி அரிவாளால் மகனை சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே லிங்கம் உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த அங்கு வந்த சாயல்குடி போலீஸாா் லிங்கத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தந்தை முனியாண்டி மீது வழக்குப் பதிவு செய்த சாயல்குடி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.