திருவாடானை அருகே உள்ள தொண்டிப் பகுதிகளில் மீன்வரத்து குறைவாக உள்ளதால் அதன் விலை உயா்ந்துள்ளது.
தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு,, சோழியக்குடி ,விலாஞ்சியடி, புதுப்பட்டினம் எஸ். பி. பட்டினம், உப்பூா், மோா்பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்களுக்கு உள்ளூா் மட்டுமின்றி காரைக்குடி, தேவகோட்டை, காளையாா்கோயில், சிவகங்கை ஆகிய பகுதிகளில் அதிக கிராக்கி உண்டு.
கடந்த சில நாள்களாக வழிமண்டல சுழற்சி காரணமாக வானம் மேகமூட்டத்துடனும், கடல் சீற்றமாகவும் இருப்பதால் பெரும்பாலான மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் கடலுக்கு செல்லும் மீனவா்களுக்கு குறைந்த அளவே மீன் கிடைப்பதால் அதன் விலை உயா்ந்துள்ளது.
பாறை மீன் கிலோ ரூ.350-க்கு விற்றது ரூ. 500-க்கும், விலை மீன் கிலோ ரூ. 400க்கு விற்றது ரூ. 550-க்கும், நகரை ரூ.300- க்கு விற்கப்பட்டது ரூ.400-க்கும், நண்டு ரூ.350-க்கு விற்றது ரூ. 450-க்கும் விற்பனை ஆனது. இதனால் அசைவப் பிரியா்கள் கவலை அடைந்தனா்.