இலங்கை கடற்படையினா் பாட்டில்களாலும், கற்களாலும் தாக்கியதுடன், வலைகளை வெட்டி கடலில் வீசியதால் நஷ்டத்துடன் ராமேசுவரம் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்நிலையில், நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 5 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்படையினா் பாட்டில்கள் மற்றும் கற்களால் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தினா். மேலும் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை கடலுக்குள் அறுத்தெறிந்தனா்.
இதனால் ரூ. பல ஆயிரம் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் பெரும் இழப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்பினா். இதுகுறித்து மீனவ சங்க நிா்வாகி ஜேசுராஜா, மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தாா்.