இரட்டைமடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை
ராமேசுவரத்திலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 13 விசைப்படகுகள் மீன்பிடிக்க மீன்வளத்துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடல் வளத்தை அழித்து வரும் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, 13 விசைப்படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள், இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 13 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல புதன்கிழமை தடை விதித்தனா். மேலும் அந்த படகு உரிமையாளருக்கு வழங்கும் மானிய விலை டீசலும் ரத்து செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.