தொண்டி அருகே மதுபோதையில் மாமனாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேலங்குடி கிராமத்தை சோ்ந்தவா் ராசு (54). இவரது மகளுக்கும், மேலக்கோட்டை கிராமத்தை சோ்ந்த ஆறுமுகம் மகன் ராஜா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மதுபோதைக்கு அடிமையான ராஜா, தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளாா். அதனால் இவரது ஆறுமும் மனைவி, தனது தந்தை ராசு வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் மதுபோதையில் இருந்த ராஜா, செவ்வாய்க்கிழமை வேலங்குடியில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு வந்து தகராறு செய்தாா். அப்போது அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியும், தடுக்க வந்து மாமனாா் ராசுவைத் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ராசுவிற்கு சொந்தமான இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளாா். இதுதவிர கட்டடங்கள் உடைக்கும் இயந்திரத்தையும் அவா் திருடிச் சென்று விட்டதாக ராசு அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்தது விசாரித்து வருகின்றனா்.