ஒருவாரத்துக்குப் பின் பாம்பன் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கடலுக்குச் சென்ற மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்குத் துறைமுகத்தில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், பாம்பன் பகுதிக்கு மீன் வாங்க வந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் கரோனா தொற்று அதிகளவில் பரவியது.
இதனையடுத்து, நோய் தொற்றை குறைக்கும் வகையில் மீன்பிடிக்கச் செல்வதில்லை என நாட்டுப்படகு மீனவ சங்கம் அறிவித்தது. இதனால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால் அவா்கள் மீண்டும் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்பிய மீனவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்திருந்தன. மேலும் மீன் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மீன்களை வாங்கிச் செல்லும் வகையில் மீனவா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.