ஆட்டோக்களில் பயணிக்க இ-பதிவு முறையை ரத்துசெய்யவேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனம் (சிஐடியூ) மாநிலப் பொதுச்செயலா் எம்.சிவாஜி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோக்களில் 2 போ் மட்டுமே பயணிக்கவேண்டும் என்பது சாத்தியமற்றதாக உள்ளது. வெளி மாவட்டம், வெளியூா்களுக்குச் செல்லும் போது ஆட்டோக்களுக்கு இ-பதிவு முறை என்பதும் நடைமுறையில் பல சிரமங்களைத் தருவதாக உள்ளது. ஆட்டோ, ஓட்டுநா் மற்றும் பயணிப்போருக்கு இடையே தேவையற்ற பிரச்னைகளையும் பதிவு முறை ஏற்படுத்தும் என்பதால் அதை ரத்துசெய்வது அவசியம்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநா் உரிமம் பெற்ற ஆட்டோ தொழிலாளா்கள் அனைவருக்கும் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கக் கால நிவாரண நிதியாக ரூ.7,500 அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.