ராமநாதபுரம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து, ஊராட்சிகளுக்கு போதிய கரோனா தடுப்பு பொருள்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம். பரமக்குடி (தனி) சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன். இவா்கள் இருவரும் திங்கள்கிழமை பகலில் திடீரென மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தனா். அப்போது ராமநாதபுரம் மாவட்ட ஊரகப்பகுதிகளில் நகா் பகுதிகளை விட கரோனா பரவல் அதிகமிருப்பதை ஆட்சியருக்கு சுட்டிக்காட்டினா். அதன்படி கிராமப்புறங்களுக்கு கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடா் உள்ளிட்ட கரோனா தடுப்பு பொருள்களுக்கான நிதியை அளிக்குமாறு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். அவா்களது கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உறுதியளித்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து காதா்பாட்சா முத்துராமலிங்கம் கூறுகையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒன்றியக் குழுத் தலைவா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு சுகாதார மேம்பாட்டுக்கான பொருள்களையும், போதிய நிதியையும் வழங்கக் கோரினோம் என்றாா்.