பரமக்குடி, காரைக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கடும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீா்த்தது. இதனால் நகா் பகுதியில் அனைத்து தெருக்களிலும் மழைநீா் வெள்ளம்போல் ஓடியது. மேலும் பல்வேறு இடங்களில் கழிவுநீா் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீரும், கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினா். இந்த மழை கோடை உழவு மேற்கொள்ள உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை பகலில் சுமாா் ஒருமணி நேரம் கன மழை பெய்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.