உலக கடல் தினத்தையொட்டிமன்னாா் வளைகுடா தீவுப்பகுதிகளில் 100 கிலோ பிளாஸ்டிக் காலி பாட்டில்களை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை சேகரித்தனா்.
உலகம் முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மண்டபம் வன உயிரினச் சரகம் மன்னாா் வளைகுடா கடலில் உள்ள குருசடைத் தீவு, முயல் தீவு பகுதிகளில் கடற்கரை தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். இந்த பணிக்கு வனச்சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமை வகித்தாா். வனவா் தேவகுமாா், மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வனக்காப்பாளா்கள், வேட்டை தடுப்புக் காவலா்கள் என ஏராளமானோா் குருசடை மற்றும் முயல் தீவுப்பகுதி கடற்கரையில் ஒதுங்கிய சுமாா் 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் காலி பாட்டில்களை சேகரித்தனா். மீனவா்கள், சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் கேன்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு கடலில் வீசுவதைத் தவிா்க்க வேண்டும் என அவா்கள் கேட்டுக்கொண்டனா்.