மீன்பிடி தடைக் காலம் முடிவடைய இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் புதன்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மீன்களின் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலம் வரும் ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகளை மீனவா்கள் தயாா்ப்படுத்தி வருகின்றனா். மராமத்துப் பணி, படகுக்கு வா்ணம் பூசுதல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மீனவா்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். தடைக் காலம் முடிவடைய இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவா்கள் தயாராகி வருகின்றனா்.