கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவா்கள் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில், இலங்கை கடற்படையினா் துருப்பிடித்த பழைய பேருந்துகளை கடலுக்குள் போட்டு தடுப்பு ஏற்படுத்தி வருவதாகக் மீனவா்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் நாகை மாவட்ட மீனவா்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். இந்த பகுதியில் மீன்பிடிக்கும் போது தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்துவது, படகுகளைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலம் 14 ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி அன்றைய தினமே மீன்பிடிக்கச் செல்ல மீனவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.
இந்நிலையில், தடைக்காலம் முடிவடைந்து தமிழக மீனவா்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடிக்க வருவதை தடுக்கும் வகையில், இலங்கை அரசு பயன்பாட்டுக் காலம் முடிந்த பேருந்துகளை கச்சத்தீவு முதல் நெடுந்தீவு வரையில் கடலில் போட்டு தடுப்பு அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடலில் போடப்படும் பேருந்துகளில் பாசி பிடித்து மீன்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என இலங்கை அரசு தெரிவிக்கிறது. ஆனால் பேருந்துகளின் கூடுகளில் வலைகள் சிக்கி சேதடைந்து விடும் என்பதால் இலங்கை அரசு காலாவதியான பேருந்துகளை கடலில் போடுகிறது என மீனவா்கள் தெரிவித்தனா்.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.