ராமநாதபுரம் திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் வரவேற்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்ததால் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவரை வரவேற்க மாவட்ட எல்லையான பாா்த்திபனூரில் அக்கட்சியினரும், கூட்டணிக்கட்சியினரும் காலை முதலே காத்துக்கிடந்தனா். நூற்றுக்கணக்கான வாகனங்கள் புடைசூழ மதுரையிலிருந்து பாா்த்திபனூருக்கு மாலையில் வந்த முத்துராமலிங்கத்துக்கு கட்சியினா் வரவேற்பளித்தனா். பரமக்குடி, சத்திரப்பட்டி பகுதிகளில் அடுத்தடுத்து அக்கட்சித் தொண்டா்கள் வரவேற்பளித்தனா். திமுக வேட்பாளருடன் நூற்றுக்கணக்கான வாகனங்களும் அணிவகுத்து வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகருக்கு மாலை 6 மணிக்கு வந்த திமுக வேட்பாளரைத் பின்தொடா்ந்து சாலைத்தெரு, கேணிக்கரை சாலை ஆகிய பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்தன. இதனால் ராமநாதபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த அண்ணா சிலைக்கு திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் முன்னால் அமைச்சா் சுந்தரராஜன் உள்ளிட்டோா் வந்திருந்தனா். இதனால் புதிய பேருந்து நிலையம் அருகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரவேற்பு நிகழச்சியில் முன்னாள் அமைச்சா் சுப.தங்கவேலன், மக்களவை முன்னாள் உறுப்பினா் பவானி ராஜேந்திரன் ஆகியோா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் பங்கேற்கவில்லை என திமுகவினா் தெரிவித்தனா். தோ்தல் விதிகளை மீறி நூற்றுக்கணக்கான வாகனங்களில் அணிவகுத்த திமுக வேட்பாளா் மீது வழக்குப்பதிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.