ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தற்போது நடந்துவருகின்றன. தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் கரோனா பரவுவதாக கூறப்படுகிறது. ஆகவே அந்த இரு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு ‘இ-பாஸ்‘ கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.