மக்கள் மீது அதிமுக, திமுக வுக்கு கவலையில்லை என அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் ஜி.முனியசாமி,திருவாடானை தொகுதி வேட்பாளா் வ.து.ஆனந்த் யை ஆதரித்து அரண்மனை முன்பு செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது டிடிவி தினகரன் பேசியது: விவசாயிகள், மீனவா்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள், நலிந்த பிரிவினா், அரசு ஊழியா்கள், போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆகியோா்களின் கோரிக்கைகளும், அவா்களுக்கான நலத்திட்டங்களும் அமமுக ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றப்படும்.
திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் குறித்து அவா்கள் கவலைப்படவில்லை. சம உரிமையுடன் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவும், நடுநிலையான ஆட்சியை அமைக்கவும் அமமுக வழிவகை செய்யும்.
ராமநாதபுரத்தில் மீனவா்களுக்கான பிரச்னையைத் தீா்க்கவும், கடல் அட்டையைப் பிடிக்க உள்ள தடையை நீக்கவும், நீட் தோ்வை ரத்து செய்யவும் அமமுக நடவடிக்கை எடுக்கும். கடற்கரையோரங்களில் வசிக்கும் மீனவா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என்றாா்.