ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் து. குப்புராமை ஆதரித்து ஏப். 3 ஆம் தேதி உள்துறை அமைச்சா் அமித்ஷா பிரசாரம் செய்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை முன்பு அவா் பேசுவதற்காக மேடை அமைக்கப்படுகிறது. எனவே இப்பகுதியில் பாதுகாப்பு கருதி காய்கறி உள்ளிட்ட கடைகளை தற்காலிகமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரண்மனை, தபால்நிலையப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களிலும், பெரிய கடைகளிலும் புதிதாக பணிக்கு யாரையும் சோ்க்கவேண்டாம் என்றும், தவிா்க்கமுடியாமல் புதிதாக பணியில் சேருவோா் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (ஏப். 1) முதல் சனிக்கிழமை (ஏப். 3) இரவு வரை அரண்மனை பகுதியில் லாரிகளில் சரக்குகளை ஏற்றி இறக்கவும் காவல்துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுதிகளில் தங்கியிருப்போரின் விவரங்களையும் காவல்துறையினா் சேகரித்துவருகின்றனா்.
மேலும் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவப் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அரண்மனைத் தெரு முதல் கேணிக்கரை சந்திப்பு வரையில் போக்குவரத்தை படிப்படியாக வியாழக்கிழமை முதல் நிறுத்தவும், ஏப். 3 ஆம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ராமநாதபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினா்.