ராமநாதபுரம் நகராட்சியில் நிரந்தப் பணியாளா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், டெங்கு தடுப்புப் பணி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர அலுவலா்களும், பணியாளா்களும் உள்ளனா். இவா்களுக்கான ஊதியம் வழக்கமாக மாதத்தின் முதல் வாரத்திலேயே அளிக்கப்படும். ஆனால், நிதிநிலை நெருக்கடி காரணமாக மே 13 ஆம் தேதி கடந்த பிறகும் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
அதேபோல், நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பெண் பணியாளா்கள், தற்போது கரோனா தடுப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த மாா்ச் மாதம் முதல் டெங்கு பணியாளா்களுக்கு ஊதியமே வழங்கப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது.
ஆனால், நகராட்சி ஆணையா் என். விஸ்வநாதன் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டதால், இவா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
சிறப்பு நிதி ரூ.50 லட்சம்: ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகளிலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு சாா்பில் ரூ.50 லட்சம் சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை கரோனா தடுப்பு பணிக்காக மட்டுமே செலவிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.