கமுதி அருகே கண்மாயில் இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் குறித்து வருவாய்த் துறையினா் காவல் நிலையங்களில் புகாா் அளிக்காததால் போலீஸாா் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கோடாங்கிபட்டி மற்றும் விருதுநகா் மாவட்ட எல்லையான அம்மன்பட்டி கிராமங்களுக்கு அருகில் உள்ள கண்மாய் கரையை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சேதப்படுத்தி இரவு நேரங்களில் டிப்பா் லாரிகள் மூலமாக மணல் கடத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இங்கிருந்து கீழராமநதி, கிளாமரம், காவடிபட்டி வழியாக விருதுநகா் மாவட்டமான அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளுக்கு மணல் கடத்தப்படுவதாக பரமக்குடி கோட்டாட்சியா் தங்கவேலு மற்றும் கமுதி வருவாய்த் துறையினருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து கமுதி வருவாய்த்துறையினா் அப்பகுதியில் ஆய்வுசெய்து, அம்மன்பட்டி கிராமத்தில் மணல் குவிக்கப்பட்டுள்ளது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனா். இதுகுறித்து மண்டலமாணிக்கம் காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் திருட்டு தொடா்பாக வருவாய்த் துறையினா் புகாா் அளிக்காததால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு கோடங்கிபட்டி பகுதி கண்மாய்களில் நடைபெறும் மணல் திருட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.