ராமேசுவரத்தில் மீன்பிடி தடைகாலம் மற்றும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை பொதுமுடக்கம் காரணமாக கூலித் தொழிலாளா்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலாத் தொழிலை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல் 15 முதல் மீன்பிடித் தடைகாலம் தொடங்கியது. இன்று வரையில் 45 நாள்கள் கடந்து விட்டன.
மேலும் பொதுமுடக்கம் காரணமாக ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களின் வருகை முற்றிலும் தடைபட்டு விட்டது. இதனால் ராமேசுவரம் பகுதியில் பெரும்பாலான கூலித் தொழிலாளா்கள் வேலையின்றி முடங்கியுள்ளனா். இதனால் கூலித் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு அன்றாட உணவு கிடைப்பது கூட போராட்டமாக உள்ளது.
தற்போது மளிகைக் கடைகளும் அடைக்கப்பட்டு விட்டதால், கடனுக்கு கூட பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் காய்கனிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்தாலும் அதனை வாங்க பணமின்றி தவிப்பதாக மீன்பிடித் தொழிலாளா்கள் கூறுகின்றனா். எனவே பொதுமுடக்க காலத்தில் இங்குள்ள மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள கூலித்தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.