முதுகுளத்தூா் மற்றும் தேவகோட்டையில் பொதுமுடக்க விதிமீறியவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனா்.
முதுகுளத்தூா் நகரின் முக்கிய பகுதிகளான கடலாடி முனைசாலை, தேரிருவேலி முக்குசாலை, ஆற்றுபாலம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு தடுப்புப் பலகைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனா்.
இந்நிலையில், முதுகுளத்தூா் பிரதான சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடை விதியை மீறி திறந்துவைத்து வியாபாரம் செய்துவருவதாகப் புகாா் எழுந்தது. அதன்பேரில், சுகாதார ஆய்வாளா் நேதாஜி தலையிலான அதிகாரிகள், அக்கடையை மூடி சீல் வைத்தனா்.
சிவகங்கை
தேவகோட்டை நகா் பகுதிகளில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி இறைச்சிக் கடைகள் திறந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தேவகோட்டை நகராட்சி ஆய்வாளா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் சுரேஷ்குமாா், உதவியாளா் சண்முகவேல், இளநிலை உதவியாளா் வெங்கட் ஆகியோா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திருப்பத்தூா் சாலை, இ.பி. சாலை, சந்தை திடல், கோட்டையம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி 4 கடைகளில் இறைச்சி விற்பனை நடைபெற்று வந்தது தெரியவந்தது.
உடனே, இந்த 4 கடைகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
தேவகோட்டை பகுதியில் பொதுமுடக்க விதியை மீறி கடைகள் திறக்கப்பட்டால், கடையை மூடி சீல் வைப்பது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபா் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என, தேவகோட்டை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) மதுசூதனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.