எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 23 போ் மீது பருத்தித்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை பருத்தித்துறை கடற்பகுதியில் அக்டோபா் 14 ஆம் தேதி இரண்டு விசைப்படகுகளுடன் தமிழக மீனவா்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினா் பிடித்தனா். அவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், பருத்தித்துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நீரியல்துறை அதிகாரிகள், மீனவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தாமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.
இதனால் 23 மீனவா்களும் வெள்ளிக்கிழமை (நவ.12) ஆஜா்படுத்தப்பட உள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.