ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற எல்லைப் பிடாரியம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள முதல்நாடு கிராமத்தில் கண்மாய் கரையில் எல்லைப் பிடாரியம்மனுக்கு பீடம் அமைத்து 101 கிடாய் வெட்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோதத் திருவிழா 3 தலைமுறைகளாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு சனிக்கிழமை (அக். 2) நள்ளிரவில் ஆண்கள் மட்டும் ஒன்று கூடி கண்மாயில் மண் எடுத்து எல்லைப்பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து, பொங்கல் வைத்தனா். பின்னா் சிறப்பு பூஜைகள் செய்து, 101 கிடாய் பலியிட்டு, பச்சரிசி சாதத்தை உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைத்தனா்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழாவுக்கு வந்திருந்த ஆண்கள் அனைவருக்கும், சாத உருண்டை மற்றும் கறி விருந்து பரிமாறப்பட்டது.
இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பாா்க்கக் கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருள்கள் அனைத்தும் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன. இவ்விழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனா்.