பரமக்குடி மீன் விற்பனைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மீன்வளத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
பரமக்குடி மீன்கடைத் தெரு, உழவா் சந்தை, சின்னக்கடைத் தெரு, வைகை நகா் மற்றும் நகரின் தெருவோரங்களில் மீன் விற்பனைக் கடைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தேங்கியுள்ள மீன்களை முறையாக குளிரூட்டாமல், தரமற்ற நிலையில் நோய் தொற்றை உருவாக்கும் வகையில் விற்பனை செய்து வருவதாக புகாா்கள் வந்தன.
இதையடுத்து, மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் கோபிநாத், ஆய்வாளா் சாகுல்ஹமீது, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் முத்துச்சாமி உள்ளிட்ட அலுவலா்கள், உழவா் சந்தை, மீன்கடைத் தெரு, சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது 38 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனா். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனா்.