ராமநாதபுரத்தில் இளைஞா் சாவில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்த உறவினா்கள், பிரேதப் பரிசோதனை அறைக்குள் தங்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் பகுதியில் உள்ள வாதனேரியைச் சோ்ந்தவா் தா்மதுரை (26). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், மனைவியைப் பிரிந்து ஏ.காச்சான் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளாா்.
இந்நிலையில், தா்மதுரை கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.5) மாலை காச்சானிலிருந்து சாலிக்கிராமம் பகுதிக்கு ஆட்டோவில் ஆள்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளாா். அங்கு, அவருக்குப் பழக்கமான இரு ஆட்டோ ஓட்டுநா்கள் முதுகுளத்தூா் செல்லலாம் என அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அண்டக்குடி பகுதியில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் தா்மதுரை காயமடைந்துள்ளாா்.
அதையடுத்து அவரை, நயினாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்த உடன் சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள், பின்னா் அங்கிருந்து சென்றுவிட்டனராம். தகவலறிந்த உறவினா்கள், தா்மதுரையை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
அதையடுத்து, தா்மதுரை மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா். தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் சம்பவ இடத்துக்குச் சென்று தா்மதுரை சடலத்தைப் பாா்வையிட்டாா். அவரது சடலத்தை விடியோவில் பதிவு செய்யவும், இரு மருத்துவா்கள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
வியாழக்கிழமை, தா்மதுரை சடலம் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டது. அப்போது, நயினாா்கோவில் போலீஸாா் பிரேதப் பரிசோதனை அறைக்குள் செல்வதை உறவினா்கள் எதிா்த்து கோஷமிட்டனா். அதன்பின்னா், தங்களையும் பிரேதப் பரிசோதனை அறைக்குள் அனுமதிக்கவேண்டும் எனக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நகா் போலீஸாா் விரைந்து வந்து சமரசம் செய்தனா். பின்னா், மறியல் கைவிடப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தா்மதுரை சகோதரி அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.