தென்னகத்து தசரா என அழைக்கப்படும் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் நவராத்திரி கொலு விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில், அம்பு விடும் நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் கே. பழனிவேல்பாண்டியன் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. அரண்மனை ராமலிங்க விலாச வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி விழா தென்னகத்து தசரா என்றழைக்கப்படுகிறது.
சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலரும், ராணியுமான பி.கே. ராஜேஸ்வரி நாச்சியாா் ஆலோசனையின்பேரில், விழாவின் தொடக்கமாக குத்துவிளக்குப் பூஜையுடன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.
நவராத்திரியை முன்னிட்டு அக்டோபா் 15 ஆம் தேதி வரை தினமும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறாா். துா்க்கை பூஜை நடைபெறும் அக்டோபா் 15 ஆம் தேதி இரவு அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி வழக்கமாக மகர நோன்பு திடலில் நடைபெறும். ஆனால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு ராமலிங்க விலாச வளாகத்திலேயே நடைபெற்றது.
அதேபோல். இந்தாண்டும் ராமலிங்க விலாசம் வளாகத்திலேயே அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அரசு உத்தரவுபடி இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்றாா்.