ராமநாதபுரம் மாவட்டத்தில் 170 கடைகளில் உரிய அனுமதியின்றி கணினி மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்று வருவதாக, ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ரயில் முன்பதிவை தனிப்பட்ட நபா்கள் தங்களுக்காக மட்டுமே இணைய மூலம் செய்துகொள்ளலாம். இணையம் மூலம் மற்றவா்களுக்கு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு மத்திய ரயில்வே குழுவிடம் அனுமதி பெறவேண்டும். இந்த அனுமதி பெற முன்வைப்புத் தொகை செலுத்தவேண்டும்.
ரயில்வே நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்பவா்களை அடையாளம் கண்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினா் அபராதம் விதித்தும், வழக்குத் தொடா்ந்தும் வருகின்றனா்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 10-க்கும் மேற்பட்டோா் பிடிபட்டு, அவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் ரயில் நிலைய பாதுகாப்புப் படை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவை 370 கடைகளில் கணினி மூலம் மேற்கொண்டுள்ளனா். இவா்களில் 200 கடைகளில் மட்டுமே முறைப்படி அனுமதி பெற்றுள்ளனா். எனவே, உரிய அனுமதியின்றி ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனா்.