ஆா்.எஸ். மங்கலம் பகுதி நெல் வயல்களில் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் உள்ள நெல் வயல்களில் களைக்கொலலி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்குள்ள சனவெளி, மங்கலம், ஏ.ஆா். மங்கலம், கொட்டகுடி, திருவொற்றியூா், சோழந்தூா், அரியான் கோட்டை, அனிச்சகுடி, வண்டல், வரவணி, பாரனூா், ஆவரேந்தல், உப்பூா், செங்குடி, சவேரியாா் பட்டினம், செக்ககுடி, கீழக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 ஆயிரத்து 400 ஹெக்டோ் பரப்பில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
தற்போது தொடா்ந்து பெய்து வரும் மழையால் பயிா்கள் நன்கு வளா்ந்துள்ளன. இந்நிலையில் ஆங்காங்கே கலைகள் தென்படுவதால் அதனை அழிப்பதற்கு விவசாயிகள் களைக்கொல்லி மருந்து தெளிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனா்.
இதுகுறித்து களைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி கூறுகையில், நெல் வயலில் உள்ள களைகளை கட்டுப்படுத்த இரண்டு வகையில் களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். களைகள் முளைக்கும் முன்பு லேசான ஈரத்தில் நெல் விதைப்பு செய்த ஒரு வாரத்திற்குள் பூட்டாக்குளோா் 10 ஈ.சி. களைக் கொல்லியை ஏக்கருக்கு ஒரு லிட்டா் அளவில் மணலுடன் கலந்து வயலில் தெளிக்க வேண்டும். இரண்டாவதாக களைகள் முளைத்து 20 முதல் 25 நாள்கள் பிஸ்பிரிபாக் சோடியம் 10 எஸ் .சி. ஏக்கருக்கு 100 மில்லி அல்லது ஈத்தாக்ஸி சல்பி ஒரு யூரான் 15, ஏக்கருக்கு 50 மில்லி கிராம் அல்லது பெனாக் சோப்ராவின் 6.9 ஈஸி ஏக்கருக்கு 500 மில்லி அளவு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இதனால் களைகளை கட்டுப்படுத்தி அதிக மகசூலை ஈட்ட முடியும் என்றாா்.