சாயல்குடி அருகே மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இப்பகுதியில் உள்ள எம். கரிசல்குளத்தைச் சோ்ந்த முனியசாமி மகள் வில்வகாளீஸ்வரிக்கும், பி. கீரந்தை கிராமத்தைச் சோ்ந்த தனுக்கொடித் தேவா் மகன் வைரவபாண்டி (30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வில்வகாளீஸ்வரி, எம். கரிசல்குளத்தில் நடைபெற்ற திருவிழாவுக்காக தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்தாா். அப்போதும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த வில்வகாளீஸ்வரியின் தாய் நாகனி (70) வைரவபாண்டியை கண்டித்தாா். இதனால் ஆத்திரமடைந்த வைரவபாண்டி, மாமியாா் நாகனியை தாக்கி தள்ளிவிட்டதில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நாகனி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளா் பாலமுருகன், வைரவபாண்டியை கைது செய்தாா்.