சுதந்திரப்போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்காக அவரது திருவுருவ சிலையின் தங்கக் கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமாகிய ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின திருவுருவ சிலைக்கு 2014 இல் அதிமுக சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ஜயந்தி விழாவின்போது தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணவிக்கப்படும்.
இதையும் படிக்க- கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்!
மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பாதுகாக்கப்படும் இந்த தங்கக் கவசத்தை கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு வாங்கி, நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பது வழக்கம். நிகழ் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜெயந்தி, 49 ஆவது குரு பூஜை அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்படும் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, ஆர்பி.உதயகுமார், எம்.மணிகண்டன், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.