சூறைக்காற்றின் வேகம் குறைந்ததால் 4 நாள்களுக்குப் பின்பு ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணை பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசியது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இதனால் கடந்த 4 நாள்களாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காற்றின் வேகம் குறைந்ததால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் மண்டபம் வடக்குத் துறைமுகத்தில் இருந்தும் விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றனா்.