ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 2 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரையில் 20250 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் சிகிச்சைப் பலனின்றி 352 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், வெளிநாடு செல்வோா் உள்ளிட்ட 500 பேருக்கும் அதிகமானோருக்கு தினமும் கபம் சேகரித்து கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் திங்கள்கிழமை கபம் சேகரிக்கப்பட்டவா்களுக்கான கரோனா பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் 2 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் இருந்த 4 போ் நலமடைந்ததை முன்னிட்டு அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மாவட்ட அளவில் தற்போது 43 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.