ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறையில் பதிவு பெறாத விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அதிகாரிகள் கூறினா்.
ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் விசைப்படகு மீனவா்கள் மற்றும் படகு உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் இ.காத்தவராயன் தலைமை வகித்தாா். மீனவா்கள் சங்கப் பிரமுகா்கள் ஜஸ்டின், ஜேசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை. மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளை பின்பற்றியே அனைத்துப் படகுகளிலும் மீன்பிடிக்கவேண்டும். விதி மீறும் படகுகள் மாவட்டத்திலிருந்து அகற்றப்படும்.
படகுகளின் பதிவெண்களை விதிமுறைக்கு உள்பட்டே எழுத வேண்டும். சா்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதைத் தவிா்க்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநா் கதிரேசன் மற்றும் சிவராமசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.