ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த மிகப்பெரிய வெளிமாவட்ட விசைப்படகுகளை வெளியேற்றக் கோரி, பெரிய விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 250-க்கும் மேற்பட்ட சிறிய படகுகளும், 450-க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகளும் உள்ளன. இதில் பெரிய விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்றால் 80 ஆயிரம் வரை செலவாகும். சிறிய படகுகள் மீன்பிடிக்கச் செல்ல 40 ஆயிரம் வரை செலவாகும்.
இந்நிலையில் இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் காரணமாக பெரிய விசைப்படகுகள் அதிகளவில் இழப்பு ஏற்படுகிறது. இதனால் குறைந்தளவிலான படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன. இதில் சிறிய படகுகள் பெரிய பாதிப்பின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வெளிமாவட்டத்திலிருந்து 19 விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வந்தன. இதற்கு இங்குள்ள மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இந்நிலையில், மேலும் 3 படகுகள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தப் படகுகளை துறைமுகத்தை விட்டு வெளியேற்றக் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனுமதியில்லாத வெளிமாவட்ட படகுகளை வெளியேற்ற மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி பெரிய விசைப்படகுகள் சனிக்கிழமை முதல் ஒரு வார காலம் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையில் 200-க்கும் மேற்பட்ட சிறிய படகுகளில் 1,800-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று சனிக்கிழமை வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். போராட்ட அறிவிப்பால் பெரிய விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை இரவு கடலுக்குச் செல்லவில்லை.