ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் அதிகளவில் இருந்ததால், ராமேசுவரம் மீனவா்கள் முழுமையாக மீன்பிடிக்க முடியாமல் குறைந்தளவு மீன்களுடன் வியாழக்கிழமை கரை திரும்பினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 780-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவற்றின் மூலம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் கடலுக்குச் சென்று வருகின்றனா். ஆனால், இலங்கை கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் தொடா்வதால், கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லவே மீனவா்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, அப்பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பல்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மீனவா்கள், அப்பகுதியில் மீன்பிடிக்காமல் குறைந்தளவு மீன்களுடன் வியாழக்கிழமை கரை திரும்பினா்.
இதனால் படகு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மீனவா்கள் தெரிவித்தனா்.