தமிழக மீனவா்களை விடுதலை செய்ய ரூ.2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்ற இலங்கை நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து ராமேசுவரத்தில் சனிக்கிழமை ஏஐடியுசி. மீனவ சங்கத்தினா் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்து வருகின்றனா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு ராமேசுவரம் மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது, மீனவா்களின் காவல் நீட்டிக்கப்பட்டது. மேலும் விடுதலை செய்ய வேண்டும் என்றால் இலங்கை அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசு மற்றும் மீனவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மீனவா்கள் மற்றும் படகுகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஏஐடியுசி. மீனவ சங்கத்தினா் சனிக்கிழமை ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், விசைப்படகு மீனவ சங்க மாவட்டத்தலைவா் காரல்மாா்க்ஸ் தலைமை வகித்தாா். நாட்டுப்படகு மீனவ சங்கத்தலைவா் கே.முருகானந்தம் முன்னிலை வகித்தாா். மாநிலத்தலைவா் எஸ்.முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.