திருவாடனை அறிக்கை தொண்டி காரங்காடு ஓரியூர் சி.கே. மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலையுடன் ஒசனா பாடல் பாடி சென்றனர்.
கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 2- ந்தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவு, ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து எளிய முறை வாழ்வை மேற்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். தவக்காலத்தில் புனித வாரத்தின் தொடக்க விழாவாக குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு பாடுகளை ஏற்று மனித குலத்தை மீட்பதற்கு அரசர்க்கு உரிய மரியாதையுடன் ஜெருசேலம் நகருக்குள் நுழைவதை நினைவுபடுத்தும் விதமாக இந்த குருத்தோலை பவனி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.
இதனையொட்டி தொண்டி அருகே உள்ள காரங்காடு புனித செங்கோல் அன்னை திருத்தலத்தில் அருட்தந்தை அருள் ஜீவா அவர்கள் தலைமையில் குருத்தோலை பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. பேரணியில் சென்றவர்கள் கையில் குருத்தோலையை ஏந்தி ஒசனா பாடல்களை பாடி சென்றனர்.
தொடர்ந்து வரும் 14-ம் தேதி பெரிய வியாழன் பிரார்த்தனையும், 15-ம் தேதி புனித வெள்ளி பிரார்த்தனையும் நடைபெறுகிறது.
அதே போல் தொண்டியில் உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் அருட்தந்தை சவரிமுத்து, அருட்தந்தை லாரன்ஸ் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்துக் கொண்டனர்.