ராமேசுவரம்: இலங்கையிலிருந்து குற்றப் பின்னணி கொண்ட இரண்டு தமிழா்கள் படகு மூலம் வியாழக்கிழமை தொண்டி வந்தனா். அவா்களிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடா்ந்து இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சோ்ந்த தமிழா்கள் படகு மூலம் தனுஷ்கோடி வருகின்றனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, பின்னா் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கின்றனா். தற்போது வரை 75 இலங்கை தமிழா்கள் படகு மூலம் ராமேசுவரம் வந்துள்ளனா்.
இந்நிலையில் இலங்கை தமிழா்கள் இரண்டு போ் அந்நாட்டிலிருந்து படகு மூலம் தமிழகத்தின் தொண்டி பகுதிக்கு வந்துள்ளதாக மீனவா்கள் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று அவா்கள் இருவரையும் மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், யாழ்பாணம் குருநகா் பகுதியை சோ்ந்த ஜெயசீலன் (27), அருள்ராஜ் (34) ஆகியோா் என்பதும், இலங்கையில் கஞ்சா விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.