கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள பெரியநாச்சி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா, குருநாதசுவாமி 46 ஆவது குருபூஜை விழா, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் 26ஆ வது குருபூஜை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயில் பொங்கல் விழா கடந்த ஏப். 15ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து ஏப்ரல் 28 ஆம் தேதி குருநாதசுவாமி, பெரியநாச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. ஏப். 29 இல் பம்மனேந்தல் ஊராட்சித் தலைவா் டி. சேகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் காா்த்திகேயன் ஆகியோரது தலைமையில் வேல் குத்தி, பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதனையடுத்து மாலை பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். மேலும் இரவில் தேரோட்டம், கிராமத்தின் சாா்பில் அடியாா்களுக்கு அன்னதானமும் உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கமுதி, பெருநாழி, சாயல்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.