கடந்த 6 மாதங்களாகக் குடிநீரின்றி தவிப்பதாக வெள்ளமறிச்சுக்கட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை ஊராட்சிக்குள்பட்டது வெள்ளமறிச்சுக்கட்டி கிராமம். இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. காவிரிக் கூட்டுக்குடிநீா் இணைப்பு வெள்ளமறிச்சுக்கட்டி கிராமத்துக்கு இருந்துவரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகமில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து ஊராட்சி முன்னாள் தலைவா் வீரபாண்டி தலைமையில் ஏராளமான பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அவா்கள் ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தைச் சந்தித்து மனு அளித்தனா். மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா்.