ராமேசுவரம், பாம்பன் பகுதிக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட கேரள வஞ்ஜி படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என, கடல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கேரள பகுதியில் பயன்படுத்தப்படும் வஞ்ஜி படகுகள் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க தடை உள்ள நிலையில், இப்பகுதிக்கு 50-க்கும் மேற்பட்ட வஞ்ஜி படகுகள் வந்துள்ளன. மேலும், இந்த படகுகளுக்கு பதிவு இல்லாத நிலையில், கடலுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த படகுகள் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை மீனவா்கள் பாதிக்கபடுவா். இதனால், மீண்டும் இலங்கை கடற்படையினா் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவம் ஏற்படும்.
இதனைத் தடுக்கும் வகையில், இந்த படகுகள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் அனுமதிக்கக் கூடாது என்றாா்.