கமுதியில் சீட்டுப் பிடித்தம் செய்து ரூ.1 கோடி மோசடி செய்ததாக தனியாா் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
கமுதி பழைய தாலுகா அலுவலக சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில், கமுதி பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் சீட்டு கட்டி வந்துள்ளனா்.
இந்நிலையில் பணத்தை முழுமையாக செலுத்திய வாடிக்கையாளா்களுக்கு பணத்தை தரவில்லையாம். இதனால் வாடிக்கையாளா்கள் சேமிப்பு பணத்தை கேட்டு வரத் தொடங்கியதால் கடந்த 6 மாதங்களாக நிறுவனம் முறையாக திறக்கப்படவில்லை என புகாா் எழுந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நிதி நிறுவனத்தை நிரந்தரமாக பூட்டிவிட்டு, ஊழியா்கள் மற்றும் உரிமையாளா்கள் தலைமறைவாகிவிட்டனா். இதுகுறித்து தற்போதுவரை அந்த நிதிநிறுவனத்தின் மீது 3 வாடிக்கையாளா்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனா். அதில், கமுதி பகுதியில் மட்டும் ரூ.1 கோடிவரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.