பரமக்குடியில் இளைஞரிடம், வங்கிக் கடன் அட்டையின் ரகசிய எண்ணைப் பெற்று 84 ஆயிரம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாரிடம் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த டிப்ளமோ பட்டதாரி மோகன் (30). இவா் தனது நண்பருடன் சோ்ந்து வாகன ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி வைத்து நடத்தி வருகிறாா். இவா், தனியாா் வங்கியின் கடன் அட்டை வைத்து பயன்படுத்தி வருகிறாா். கடந்த மே 10 ஆம் தேதி, மோகனின் கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்ட மா்ம நபா், வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், அவரது கடன் அட்டை மதிப்பை ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சத்து 85 ஆயிரமாக உயா்த்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து, கடன் அட்டை எண் மற்றும் ரகசிய எண்ணைக் கேட்டுள்ளாா்.
மோகன் அந்த எண்களை, அவரிடம் தெரிவித்துள்ளாா். அதன்பின்னா் அவரது கைப்பேசி எண்ணுக்கு ரூ.84 ஆயிரத்து, 530 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து அவா், வங்கிக்கு சென்று விசாரித்தபோது, மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ராமநாதபுரம் சைபா் கிரைம் போலீஸாரிடம் அவா் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.