மண்டபத்தில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 4 நாட்டுப்படகுகளில் சோதனையிட்டபோது 40 சாக்கு மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூட்டைகளில் இருந்த 500 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினா் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.