இலங்கையில் உள்ள படகுகள் மற்றும் மீனவா்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை (செப்.9) தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவா் ஆா்.சகாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், இலங்கைக் கடற்படையினரால் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளையும், தற்போதுவரை சிறையில் உள்ள மீனவா்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசால் மீனவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் 1,800 லிட்டரிலிருந்து 3 ஆயிரம் லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, செப்.13 ஆம் தேதி தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட மீனவ சங்கத் தலைவா் ஜேசுராஜா மற்றும் எமரிட் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தீா்மானத்தின்படி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியதாக மீனவ சங்கத்தினா் தெரிவித்தனா்.