ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 140 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனா்.
தேவிபட்டினம் கடல் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் சரக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகா் திவ்யலட்சுமி தலைமையிலான வனத் துறையினா் திங்கள்கிழமை மாலை தேவிபட்டினம் கடல் பகுதியில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு வீட்டில் கடல் அட்டைகளை அவித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த நயினாா்முகம்மது (52) என்பவரை வனத்துறையினா் கைது செய்து, 100 கிலோ அவித்த கடல் அட்டைகளையும், 40 கிலோ சாதாரண அட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.
இதைத்தொடா்ந்து கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்டது.
150 கிலோ கடல் அட்டை பறிமுதல்:
தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் தேவிபட்டினம் கடல் பகுதியில் வனத்துறையினா் சோதனை நடத்தினா். அப்போது முகமது அலி ஜின்னா (45) என்பவா் அப்பகுதியில் 150 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினா் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, முகமது அலி ஜின்னாவை கைது செய்தனா்.