அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி திருவாடானை நீதித்துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம். இவரது மனைவி லெட்சுமி. இவா் தனது கணவருடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி ஆனந்தூா் பேருந்து நிலையத்தில் நடந்து சென்றபோது, அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா், ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம் கண்டதேவி பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திருவாடானை நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதித்துறை நடுவா் பிரசாத், அரசுப் பேருந்து ஓட்டுநா் செந்தில்குமாருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபதாரமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.