கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு ராமேசுவரம் மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 450 விசைப் படகுகளில் 3,000-த்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
இதையடுத்து, பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை காலை கரைக்குத் திரும்பினா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:
இலங்கைக் கடற்படையினரின் தொடா் தாக்குதல் காரணமாக, மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், ராமேசுவரம் மீனவா்கள் பாரம்பரியமாக மீன் பிடித்த இடத்தில் மீன் பிடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.