வரத்து அதிகரித்ததால் மீன்களின் விலை குறைவு
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் வரத்து அதிகரித்ததால் மீன்களின் விலை குறைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை,திருப்பாலைக்குடி, எம்.ஆா்.பட்டினம், பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாக ‘டித்வா’ புயல் காரணமாக மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வில்லை.
இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நாட்டுப் படகுகள், விசைப் படகுகள், ஃபைபா் படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். இதில், மீனவா்களின் வலைகளில் அதிக அளவில் மீன்கள் பிடிபட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். அதே சமயம், வரத்து அதிகரித்து மீன்களின் விலை குறைந்ததால் கவலை அடைந்தனா்.
சனிக்கிழமை மீன் சந்தையில் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட இறால் ரூ.200-க்கும், கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.400-க்கும், கிலோ ரூ300-க்கு விற்கப்பட்ட பாறை மீன் ரூ.200-க்கும் விற்கப்பட்டது.
மீன்களின் விலை, கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை குறைவாக விற்பனையானதால் அசைவப் பிரியா்கள் மகிழச்சி அடைந்தனா்.
